Sunday 30 October 2011

காதலாகி கசிந்து......




               "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும்."
      - அரவிந்தன்

        "நான் உங்களுக்காகப் பிறந்தவள். உங்களோடு வாழ்வதில்தான்
என்னுடைய வாழ்கையின் அர்த்தமே இருக்கிறது. இனியும் நீங்கள் கவலைப்பட்டால் நான் வாழ்வதில் பயனில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது நீங்க மட்டும் தான். உங்களின் நிழலாக எப்போதுமே நான் இருப்பேன். இது சத்தியம்."
      - தர்ஷினி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன்.
இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நீயும் என்னை ஏமாற்றி விடாதே."
       - அரவிந்தன்

       "என்னாலும் நீங்க இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாமல் இருக்கிறது. நானும் நீங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது இறைவன் இட்ட நியதி. உங்களை எனக்கு தந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லனும்.  எங்களை இனி எந்த சத்தியாலும் பிரிக்க முடியாது. அரவிந்தன், நான் வாழ்ந்தால் அது உங்களேடு தான். இல்லாவிட்டால் சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."
      - மாதவி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றினால் என் நிலமை என்னவாகும் என்று எனக்கே தெரியாது.'
      - அரவிந்தன்

      "அவர்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான். அரவிந், உம்மை பற்றி நல்லாப் புரிஞ்சு கொண்ட பிறகு தான் நான் உம்மை லவ் பண்ண தொடங்கினான். உம்முடைய நல்ல மனசு எனக்கு பிடிச்சிருக்கு. எல்லோருக்குமே கடந்த காலம் கறைபடிஞ்சதாய் தான் இருக்கும்.
இனியும் நீர் உமது இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது. நீர் எனக்காக நான் உமக்காக."  
       - ரஞ்சனி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன் ரஞ்சனியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றிவிடாதே."
       - அரவிந்தன்

       "நல்ல பெடியன். ஒழுங்காத் தான் இருந்தவன். இப்ப கொஞ்ச நாளாய்தான் இப்படி. யாரைப் பார்த்தாலும் இதையே செல்லிக் கொண்டு திரியிறான். ம்... எல்லாம் அவரவர் தலையெழுத்து."
      -  ஒரு வழிப்போக்கர்

Tuesday 25 October 2011

பேசியது நிலவு....



வாடா வா
காத்திருந்தேன் கன காலமாய்
மாட்டிக் கொண்டாய் இன்று
மிக வசமாய்

வளர்வதும் தேய்வதும் நானல்ல
அறியாயோ என் வரலாறு
பூமி அன்னை சுற்றுகிறாள்
அதனால் தான் இந்த கோளாறு




பள்ளங்களும் நிறைய திட்டுக்களும் என்னில்
அதற்காக
மாதர் முகத்திற்கு ஈடுநான் இல்லையென
திட்டுவாயோ என்னை?

கோடிகளை கொட்டி
வல்லரசுகளும் என்னை ஆராய
கேடுகெட்ட உனக்காய்
நான் போகவோ தூதாக

பள்ளி செல்லும் வயதிலே
நிலா நிலா வாவென்று அழைத்தாய்
பிள்ளைப் பருவமது வேறென்ன சொல்ல
இன்று
வளர்ந்து நீ அப்படி என்ன கிழித்தாய்
எவளுக்கோ நான் போய்
உன்னிலையைத் தூது சொல்ல

பரீட்சையிலே என்னைப்பற்றி
கட்டுரை வரையக் கேட்டபோது
அடுத்தவன் மேசையை
எட்டி எட்டி பார்த்தாய்
யார் தந்த தைரியத்தில் இன்று
கண்டவளின் முகத்திற்கும்
என்னை ஒப்பிட்டு எழுதினாய்





நீ அடம் பிடிக்கப் பிடிக்க
என்னைக் காட்டிக் காட்டி
உன்னை ஊட்டி வளர்த்தவள்
உன் அன்னை
உனக்கு என்னவென்றால்
என்னைப் பார்க்கப் பார்க்க
உன் காதலி தான்
நினைவுக்கு வாறாளோ?

என் வழியில் நான் சுற்றுகிறேன்
என்னைத் தொந்தரவு செய்யாதே
நாசமாய்ப் போவதென்றால்
நீ மட்டும் போய்விடு
பேசாமல் என்னை
நிம்மதியாய் விட்டு விடு.

Friday 21 October 2011

பிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)




பிடித்த கடவுள் - நீ
பித்துப் பிடித்த கடவுள்

எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ
கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று 
கல்லென்றும் பாராது நாடிவந்து – உன்
முன்விழுந்து வேண்டிநின்றேன்
காப்பாய்  எனை நீ என்று 
வைத்தாயே தொடர்ந்து எனக்கு
ஆப்பு ஆப்பாய்

சொல்லெணாத் துன்பங்கள் வந்து
சூழ்ந்து என்னை ஆர்ப்பரிப்பினும்
எல்லாம் வல்லவன் என்னோடு இருப்பான் என
வைத்தேனே உன்னில் நம்பிக்கையை
விரித்துவிட்டாயே நீயோ உன் கையை

வெற்று வேதங்களைக் கற்று கடைசிவரை
பற்றினேன் கடவுளென்று உன்னை
கை கால்களில் கட்டோடு – வைத்தியரின்
கட்டிலே கதியென்று கிடக்கின்றேன் இப்போது
நெற்றியிலே இட்டநீறு கொட்டுமுன்னே அவர்கள்
சுற்றிவந்து சூழ்ந்து நின்று அடிக்கையிலே
எட்டி நின்று நீயும் வேடிக்கை பார்த்தனையோ

நீயே பரம்பொருள் மெய்யே சிவமென்று
வாயே ஓயாமல் உரைத்த என்னை
வானம் அள்ளித் தெளித்த மழையினிலே
துள்ளி முளைத்த காளானெல்லாம்
எள்ளிநகை ஆடும் வகை செய்தனையே

அன்பே சிவமென்று நீயுரைத்த
மறைதனை நீயே மறந்தனையோ
அதை நானும் நம்பித்தானே அடுத்தவீட்டுக்
கன்னியின் மேல் காட்டினேன் அன்பை
இப்படி அவள் குடும்பமே வந்து
மொத்திவிட்டுப் போனதே என்னை
உட்காயங்கள் உயிர்வரை வலிக்க
விட்டாயே என்னைத் தனிமையிலே புலம்ப
எனக்குப் பிடித்த கடவுளா நீ
பித்துப் பிடித்த கடவுளா நீ

Tuesday 18 October 2011

பேதை மதியும் மூடமதியும்



பல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு
கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த
நிலவு படுது கதைகளிலே படாத பாடு

வேடம் பூண்டு அமுதை உண்ட
ராகு கேதுவை காட்டிக் கொடுத்ததால்
விழுங்குது அவைகள் நிலவை
பாம்பாக வந்தென்று
சந்திர கிரகணம் வந்தபோது
காரணம் அன்று சொல்லப்பட்டது

ஆடிய பிள்ளையாரை
வேடிக்கை பார்த்து நகைத்ததால்
தேயுது நிலவு சாபங்கொண்டு
ஓடிய நிலவு பரமனை வேண்ட
பிறையாய் எடுத்தார்
சிரசில் வைத்தார் என்று
படித்தேன் பாடத்தில் - மனம்
பரிதாபப் பட்டது
நிலவுக்காய் அன்று

மூன்றாம் பிறையே சிவனின்
தலையிலே இருப்பது என எண்ணி
தேடித் தேடிப் பார்த்தேன் அதனை

அடுத்தவர் பிறையை வணங்கையிலே
அது இருக்கும் முடிக்குக் கீழ்த்தானே
ஈசன் முகமது  இருக்குதென நம்பி
சற்று கீழாக உற்று உற்று நோக்கினேன்

அறியாமல் என்றேனும்
நாலாம்பிறை பார்த்து விட்டால்
நாய்படாத பாட்டை
நானே தனியாய்ப் படுவதோ என்று
கூடவந்த நண்பர்களையும்
பார்க்கவைத்து திருப்தி கொண்டதுண்டு

பசியாய் இருக்கும் சமயங்களில்
பார்க்கும் நிலவில் அழகாய்
பாட்டி வடை சுட்டால்
நாக்கில் ஊறும் எச்சில்

பாட்டியும் வடையும் அல்லவது
பள்ளமும் மேடுமே என்று
அறிவதற்கே ஆயின பலகாலம்
விஞ்ஞானிகளாயும் ஆராச்சியாளர்களாயும்
பிறகெங்கே ஆவது நாங்கள்

அட்டமி நவமி தொட்டது நாசமென்றதால்
தள்ளிப் போயின பல காரியங்கள்
நல்ல நாள் பார்த்துப் பார்த்தே


அமெரிக்கன் காரன் அங்கே தன் கொடி நாட்டி
நிலவினை தான் உரிமை கொண்டாட
நாமோ அம்புலிக்கு மாமா முறை சொல்லி
உறவு கொண்டாடினோம்

அவனவன் விண்வெளிக்கு
ஓடம் விட்டுத் தேடிப்போய்
ஆராச்சி செய்து வர
நாங்கள்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வாவென
நோகாமல் கூப்பிட்டு நிலா தானாக வருமென
இருந்து விட்டோம் சிந்திக்காமல்

உள்ளதை உள்ளபடியே
உண்மையினை உண்மையாகவே
சின்ன வயதிலிருந்தே விதைத்திருந்தால்
வீணான கற்பனைகள் சேராது இருந்திருக்கும்
தெளிவான சிந்தனைகள் சிறப்பினை சேர்த்திருக்கும்

Saturday 15 October 2011

சிந்தித்தால் சிரிப்புவரும்

ஒன்று ஒன்று என்று ஏங்கும் - மனம்
ஒன்றுமே இல்லாத போது

இன்னும் ஒன்று கிடைத்தால்
நல்லதென  ஏங்கும்
அந்த ஒன்று கிடைத்த போது

நடக்கும் போது ஓட நினைக்கும்
ஓடும் போது பறக்கத் துடிக்கும்
அடுத்தது அடுத்தது என்றே திரிந்து
இருப்பதைத் தொலைத்து நிற்கும்

கொண்டதில் கொள்வதில்லை திருப்தி – எதுவும்
நன்மைக்கே என்று அடைவதில்லை நிம்மதி

இழந்த அமைதி தொடர்ந்து வர
அலையும் மனது கடைசிவரை
கனவுகளில் மிதந்து

போதும் என்ற மனது பாரிலில்லை
பொருந்தாத ஆசைகளுக்கோ குறைவில்லை
நன்மைக்கும் தீமைக்கும் பேதைமைகள் புரிவதில்லை
ஏக்கத்தில் தவிப்பது இதற்கொன்றும் புதிதில்லை

புத்தி உணர்ந்து தெளிந்தாலும்
பித்துப் பிடித்தலையும் பிடிவாதமாய்
விந்தையான மனது இதனை
சிந்தித்தால் சிரிப்பு வரும்

சும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய முதல் கவிதை)


     
ஆகிவிட்டன ஆண்டுகள் பதினான்கு - ஆயினும்
நான் இருக்கிறேன் உன் நினைவோடு

மழிக்க மழிக்க மீண்டும் முளைக்கும் தாடிபோல்
மறக்க மறக்க உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

சூனியமாகிப் போன என் நினைவுகளில் - நீ
உதிர்த்துவிட்டுப் போன புன்னகை மட்டும்
உறவாடிக் கொண்டிருக்கின்றது

விடியாத என் பொழுதுகளோ, கனவுகளில்
உன்னோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன.

திருந்தாத என் மனமோ
உனக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது

உருப்படாத என் கைகளோ
உன்னைப்பற்றித் தினமும் எழுதிக் கொண்டிருக்கின்றது

உனக்கு மறந்திருக்கும்,
உன்னோடு நான் இருந்த பொழுதொன்றில்
விளையாட்டாய்க் கேட்டாய் - உன்னை
மறந்து நான் போனால் என் செய்வாய் என்று

வாடிய என் முகம் பார்த்து
குறும்பாகக் கண்சிமிட்டிக் கொண்டே
ச்சும்மா சும்மா என்றாய்
உனக்குத் தெரியுமா, இந்த உலகிலே
நானே இன்று
சும்மா சும்மா தான் என்று


லண்டன் தமிழ் வானொலியை நேரலையில் பார்க்கவும் கேட்கவும்
          
     

Saturday 8 October 2011

அழகே அழகே



ஒட்டுமொத்த உயிரும் ஆடிப்போக
வெட்டிவிட்டுப் போனது மின்னலென
மொட்டுவிட்டதொரு நந்தவனம்
எட்டநின்று பார்த்தபோதே குரங்கென
குட்டிக் கரணம் போட்டது மனம்

நிலவை வென்ற முகமழகு
பிறையை ஒத்த நுதலழகு
புருவம் காட்டும் வில்லழகு – அந்த
விழிகள் வீசிய வேலும் அழகு

செக்கச் சிவந்த ஆப்பில் போலும் கன்னம்
செவ்வாயில் கொவ்வை போலும் வண்ணம்
சுடாமலே வெண்மை கொண்ட சங்காம்
சுட்டுவிழிக்காரி அவள் கழுத்து

எறிக்கும் நிலவில் ஒருதுளி எடுத்து
செதுக்கிய தேகம் சிற்பமோ
உயிரைப்பறிக்கும் மெல்லிடை தன்னில்
உரசும் பின்னல் சர்ப்பமோ

அந்திவானில் கூடப் பார்த்ததில்லை
இந்த மேனி நிறத்தை – முந்தி வந்த
கனவுகளில் வந்து போன தேவதைகள்
மிச்சம்விட்ட குறையெல்லாம் மொத்தமென கண்டேன்
அழகே அழகே அது இவளே இவளென்று

Tuesday 4 October 2011

வர்ணம் ஆயிரம்




மொட்டுக்குள் ஒளிந்திருக்கும் பூவின் வர்ணம்
பாட்டுக்குள் இழைந்திருக்கும் வார்த்தை வர்ணம்
கட்டுக்குள் அகப்படாத கற்பனை வர்ணம்
ஏட்டுக்குள் எழுத்திற்குள் எத்தனை வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

அன்னையின் வார்ப்பிலே மழலையின் வர்ணம்
அவள்தரும் அன்பிலே சேர்திடும் வர்ணம்
கன்னியின் எண்ணத்தில் எத்தனை வர்ணம்
கடைவிழிப் பார்வையில் தோற்றிடும் வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

மனிதரின் பார்வையில் பிரிந்திடும் வர்ணம்
மரணமும் நேர்கையில் தெரிந்திடும் வர்ணம்
கண்ணுக்குப் புலப்படாத மாந்தரின் வர்ணம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

நிறம் எழுத்து குணம் புகழ்
இவை எல்லாம் வர்ணத்தின் அர்த்தங்கள்
ஐம்புலன் உணரும் வர்ணம் ஆயிரம்
ஆயினும் மனமே

வேண்டிடு மனிதம்

Monday 3 October 2011

வேண்டும் நெற்றியிலே கண்ணொன்று




மனிதக் குப்பைகள் மலிந்த இப்பூமியிலே
நினைத்த மாதிரி வாழ்வெனக்கு அமையவில்லை

பட்டுக்குஞ்தத்திற்கு தவமிருக்கும் விளக்குமாறுகள்
இங்கிருக்கும் எல்லாமே எனக்கு நேர்மாறுகள்

அடுத்தவரின் சுயமரியாதை அவரவரின் சுதந்திரத்தை
கெடுப்பதற்கென்றே திரியுதிங்கே கூட்டங்களாய் - நம்பவைத்துக்
கழுத்தறுத்து நல்லவராய் நடித்து வஞ்சம் தீர்த்து
முதுகில் குத்தும் மூளையற்ற ஜென்மங்கள்

களவெடுக்குதுகள் பொய் பேசுதுகள் - அடுத்தவன்
வளமாய் வாழ்ந்தால் அதுகண்டு வயிரெரியுதுகள்
அமைதியாய் யாரும் இருந்தாலும் அவர்களின்
பிரச்சனையில் மூக்கைவிட்டு குழப்பத்தை உண்டாக்குதுகள்

தற்பெருமைத் தம்பட்டம் அடிக்கின்ற மூடர்கள்
பட்டபின்புகூட திருந்தாத வடிகட்டிய முட்டாள்கள்
வீணாகத் திரிகின்ற இதுபோன்ற வேதாளங்கள்
நீறாகிப் போகட்டும்
சிவனே
நான்திறந்தால்
 
நெற்றியிலே கண்ணொன்று தந்துவிடு – உன்படைப்பில்
தறிகெட்டுப் போனதுகள் அழிந்தொழியட்டும்